பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து முதலியார்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1913, ஏப்ரல் 28-ல்,
மு.பழனியப்ப முதலியார் – சடையம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார் நாச்சிமுத்து முதலியார். தொடக்க கல்வியை சென்னிமலையிலும், உயர்நிலைக் கல்வியை திருப்பூரிலும், பட்டப்படிப்பைத் திருச்சியிலும், சட்டப்படிப்பை சென்னையிலும் பயின்றார்.
ஈரோட்டில் நான்கு ஆண்டுகள் வக்கீலாக பணிபுரிந்தார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் அல்லலுற்று, தனியாரிடம் தறித்தொழிலில் சிக்கிக்கிடந்த நெசவாளர்களை, கூட்டுறவு அமைப்பின் கீழே கொண்டு வருவதில்தான், நாச்சிமுத்துவுக்கு நாட்டம் மிகுந்திருந்தது.
கிராமியப் பொருளாதார நிர்மாணத் திட்டங்களுக்கு வலுவூட்ட, அண்ணல் காந்தியடிகள் விடுத்த அழைப்பால் ஈர்க்கப்பட்டார் எம்.பி.என். அவரது சிந்தனையின் விளைவுதான், 1941ல் உருவான, “சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கம்’ எனப்படும் சென்டெக்ஸ். இதன் தலைவராக, 46 ஆண்டுகள் இருந்து நெசவாளர்களுக்கும், கூட்டுறவுத்துறைக்கும், இவர் ஆற்றிய பணிகள் அளவிலடங்கா.
நாடா ஓசையே நமச்சிவாய மந்திரங்களாகவும்; நெசவாளர் குடியிருப்புகளே அவர் தரிசிக்கும் புண்ணியத் தலமாகவும் மாறின.
கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத் தலைவராக, 17 ஆண்டுகள், அகில இந்திய கைத்தறி வாரிய உறுப்பினராக, 32 ஆண்டுகள் இருந்தார்.
திருநெல்வேலியில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை உருவாக்கி, அதன் தலைவராகவும், 17 ஆண்டுகள் பணியாற்றினார்.
சென்னிமலை கொமராப்பா செங்குந்தர் பள்ளித் தாளாளராகவும், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பொருளாளராகவும் இருந்தார். சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ., இன்ஜினியரிங் கல்லூரியும் இவரது முயற்சியால் துவக்கப்பட்டது.
தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கைத்தறிதுறையின் வளர்ச்சிக்காவே செலவிட்ட, எம்.பி., நாச்சிமுத்து முதலியார், 1987, ஜூலை 27-ல் காலமானார்.
1976 முதல் 1987 வரை 10 வருடங்கள் தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.
சென்னிமலை என்றால் கொடிகாத்த குமரன் பெயர் நினைவுக்கு வரும். கூடவே நினைக்கப்படுவது கைத்தறியும், எம்.பி.என். என்ற பெயரும்தான்.