தருமபுரி டி. என். தீர்த்தகிரி முதலியார்
(04.11.1880 – 03.03.1953)
டி. என். தீர்த்தகிரியார அல்லது டி. என். தீர்த்தகிரி முதலியார் தர்மபுரியைச் சார்ந்த விடுதலை போராட்ட வீரர். இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு, உப்பு சத்தியாகிரகம், நீல் சிலையை அகற்றும் போராட்டங்களின்போது பல்வேறு கட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தருமபுரி மாவட்டத்துடன் பிரிக்கப்படாத சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.
![]() |
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மேதகு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தியாகி தீர்த்தகிரியாரின் நூற்றாண்டு விழா மலருக்காக எழுதிய கடிதம். |
மகாத்மா காந்தியின் செல்வாக்கு காரணமாக இந்திய சுதந்திரப் போராட்டம் அகிம்சை வழியில் செல்வதற்கு முற்பட்ட காலத்தில் துப்பாக்கியும், குண்டும் ஏந்தி வன்முறையால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற கருத்து கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தீர்த்தகிரியார் 20ம் நூற்றாண்டில் துவக்கத்தில் புரட்சி வழியில் செயல்பட்ட தலைவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோரது அணியில் அவர்களின் தோழராக இருந்தார். ஆஷ் துரையின் படுகொலையாளியைத் தேர்வு செய்ய சீட்டு குலுக்கி போடப்பட்ட பெயர்களில் தீர்த்தாகிரியாரின் பெயரும் ஒன்று. ஆனால் அதில் வாஞ்சிநாதன் தேர்வாகி ஆஷைச் சுட்டுக் கொன்றார். தீர்த்தகிரியார் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அதனால் முதலில் சுதந்திரம் நமது பிறப்புரிமையென்று குரல்கொடுத்த பாலகங்காதர திலகரைப் பின்பற்றினார்.
ஆயினும் மகாத்மா காந்தியின் அகிம்சை நெறியே அரசியல் வழக்கானபோது அதனை ஏற்று காங்கிரசு தொண்டராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.சேலம் விஜயராகவ ஆச்சாரியாரால் விடுதலை இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவரான டி. என். கந்தசாமி குப்தாவினை தனது அரசியல் குருவாக தீர்த்தகிரியார் குறிப்பிட்டுள்ளார்.
தீர்த்தகிரி ஊரெங்கும் பிளேக் நோய் பரவியதால் அன்னசாகரத்தை விட்டு குடியாத்தம் சென்று ஓராண்டு தங்கினார். அப்போது அவர் சென்னையில் மருத்துவ சாலை (கருணை பிரவாக நிதிவைத்திய சாலை, லிங்கி செட்டித் தெரு) நடத்தினார். அக்காலகட்டத்தில், சென்னை மவுண்ட் ரோட்டில் (அண்ணா சாலை) இருந்த கர்னல் நீல் சிலையை 1927-1928ல் எஸ். என்.
சோமயாஜீலு தலைமையில் அகற்ற காங்கிரசார் முடிவு செய்தனர். அதன்படி, நாலைந்து நாட்கள் அச்சிலையை உளியால் சிறுக, சிறுக உடைத்து வந்தனர். அதிகாரிகளும் சிலை பழுது பார்க்கும் வேலை நடக்கிறதென்று போய்விட்டனர். ஒரு நாள், மகாத்மா காந்தி வாழ்கவென கோஷமிட்ட பிறகு சிலை சேதமடைந்திருப்பதை கவனித்த பிரிட்டிஷ் அதிகாரிகள் காங்கிரசு தொண்டர்களைக் கைது செய்தனர். அவர்களுள் தீர்த்தகிரியும் ஒருவர்.
![]() |
தியாகி சுப்ரமணிய சிவா வள்ளல் சின்னமுத்து முதலியாருக்கு 11.02.1922 அன்று எழுதிய கடிதம். இதில் ‘எம்டன்’ என சிவா அவர்கள் குறிப்பிட்டிருப்பது தீர்த்தகிரியாரை. |
கண்ணணூர் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபோது தான் சுப்ரமணிய சிவா அவர்களுடனான நட்பு வலுப்பெற்றது. இவரின் துணிச்சலைக் கண்ட சுப்ரமணிய சிவா இவருக்கு ’எம்டன்’ என்று பெயரிட்டார்.
சிவா அவர்கள் சிறையிலிருந்து தன் சொந்த ஊரான வத்தலகுண்டு செல்லாமல் தீர்த்தகிரியாருடன் தர்மபுரிக்கு அருகிலுள்ள பாப்பாரப்பட்டி சென்று தன் இறுதி காலத்தை அங்கேயே கழித்தார். இதற்கு தீர்த்தகிரி முதலியாரும் அவரது சகலை சின்னமுத்து முதலியாரும் சுப்ரமணிய சிவா மீது காட்டிய அன்பே காரணம். இவர் சிறையில் சுப்பிரமணிய சிவாவுடன் செக்கிழுத்தார்.சிறையிலிருக்கும் போது தடை செய்யப்பட்டிருந்த ”பாணபுரத்து வீரன்” எனும் நாடகத்தை சிறைச்சாலையிலேயே நடித்துக்காட்டினார்.
![]() |
இந்தக் கடிதம் தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள் வள்ளல் சின்னமுத்து முதலியார் அவர்களுக்கு 27.01.1917 அன்று எழுதிய கடிதம் |
விவேகானந்தர், காந்தி, நேரு
மக்களின் விடுதலை போராட்டத்தை ஊக்குவிக்க தீர்த்தகிரியார் 1901-ல் சுவாமி விவேகானந்தரையும் , 1921-ல் காந்தியையும், 1937-ல் நேருவையும் தர்மபுரிக்கு வரவழைத்தார்.
![]() |
இந்த கடிதம் வ. உ. சி வள்ளல் சின்னமுத்து முதலியாருக்கு 02.11.1915 அன்று எழுதிய கடிதம். |
சுதந்திரப் போராட்டம் பற்றி துண்டு பிரசுரங்களை ஊரெங்கும் வழங்குவார். விடுதலை போராட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலமென்பதால் போராட்ட செய்திகளை கையெழுத்து பிரதிகளாக்கி வெளியிடுவது அவசியமான பணியாகயிருந்தது. அந்த சமயத்தில் கடலூரைச் சார்ந்த அஞ்சலை – முருகப் படையாச்சி தம்பதியினர் செய்திகளை ஊர் ஊராக சென்று சேகரிப்பதும், வெளியிடுவதுமாக இருந்தனர். அவர்களோடு சேர்ந்து தீர்த்தகிரியாரும் ஊரெங்கும் வழங்கி வந்தார். சுதந்திர போருக்கு இளைஞர்களை ஆயத்தப்படுத்தியும், தொண்டரணியை திரட்டியும் பணியாற்றிய இவரின் வழிகாட்டுதலில் தருமபுரி மாவட்டத்தில் தொண்டர்கள் பலர் உருவாயினர்.
தீர்த்தகிரியாரின் மாப்பிள்ளை எம். எஸ். ஐயம்பெருமாள், முன்னாள் ஜனதா தளத் தலைவர் ஜி. ஏ. வடிவேலு, டாக்டர். தெய்வம் போன்றவர்கள் தீர்த்தகிரியின் தலைமையில் செயல்பட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்
எல்லோரும் கல்வியறிவு பெற வேண்டுமென்ற ஆர்வமே இவரை தர்மபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள செங்குந்தர் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டச்செய்தது. அப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித்தந்ததில் தீர்த்தகிரியாரின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.
தன் குடும்ப வாழ்விற்குத் தேவையான பணத்தை தான் அறிந்த நாட்டு மருத்துவத்தின் மூலமே ஈட்டினார். பற்பொடி, தலைவலி மருந்து, லேகியங்கள் தயாரித்தார். தான் தயாரித்த சித்த பல்பொடிக்கு தேச பக்தர் சித்ரஞ்சன் பெயரில் சித்ரஞ்சன் பல்பொடி என்றும், தலைவலி மருந்துக்கு சித்ரஞ்சன் பாம் என்றும் பெயரிட்டார் . ஆயுர்வேத மருத்துவத்தில் இருந்த திறமையை சுப்பிரமணிய சிவாவின் அறிவுரையில் விரிவுபடுத்திக்கொண்டார் .
சிறை வாழ்க்கையின் போது நூற்றுக்கணக்கான போராட்ட வீரர்களின் வயிற்றுக்கடுப்பு நோயை ஆங்கில மருத்துவம் பலன் தராததால் சிறை அதிகாரியின் வேண்டுகோளின்படி குணமாக்கினார். 1942-ல் அலிபுரம் சிறையில் இருந்த போது சிறை கண்காணிப்பாளர் குடும்பத்திற்குக் கூட மருத்துவம் செய்து குணமாக்கினார்
நெசவுத்தொழிலில் ஆரம்பம் முதல் ஈடுபாடும், அனுபவமும் கொண்ட இவர் தர்மபுரியில் உள்ள நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை 12.01.1938-ல் நிறுவினார்
![]() |
தியாகி தீர்த்தகிரியாரைப் பற்றி தமிழ்நாடு அரசாங்க செய்தித்துறை 18.11.1966 அன்று வெளியிட்ட செய்தி. இது தியாகி தீர்த்தகிரியார் நூற்றாண்டு விழா மலரிலிருந்து தொகுக்கப்பட்டது. |
சென்னை மாநில சித்த வைத்திய சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும்விளங்கினார்.
1928-ம் ஆண்டு டாக்டர் அன்சாரி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு கயிற்று கட்டில்கள் வாங்கி அனுப்பியதில் இவருக்கு பெருத்த பொருள் இழப்பு ஏற்பட்டது ஆயினும் அதற்காக வருந்தவில்லை . நாட்டின் விடுதலைக்காகவே தமது உடல், உழைப்பு, உயிர் அனைத்தையும் அளித்து தான் பெரிய நிலச்சுவான்தாராய் இருந்தும் தன் சொத்துகளை எல்லாம் நாட்டின் விடுதலை சேவைக்காக செலவு செய்து இவர் 03.03.1953-ல் ஏழ்மையிலேயே இறந்தார்
தர்மபுரி நகரின் தற்போதைய நகர பேருந்து நிலையம் தியாகி தீர்த்தகிரியார் திடலாக விளங்கியது. இந்நிலையில் நகர பேருந்து நிலையத்திற்கு தியாகி தீர்த்தகிரியார் பெயர் வைக்க நகர மன்றம் முடிவு செய்துள்ளது.